பாவத்தில் பங்கு!

Click for audio

திரு.கிருஷ்ணதாசன்

அன்பு நெஞ்சங்களுக்கு இந்த இனிய நாளில் எனது வணக்கங்கள்.  இன்று பல இடங்களில் சொத்து சண்டைகள்.  சொத்துக்காக ஏமாற்று, கொலை, நம்பிக்கை துரோகம் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.  காரணம் அறியாமை.  சொத்துக்காக தாய் தந்தையரைக் கொன்றவர்கள் சிலர்.  கைப்பிடித்த கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ துரோகம் செய்தவர் பலர்.  சொத்துக்காக நண்பர்களை ஏமாற்றி துரோகம் செய்தவர்கள் பலர்.    இதை நானும் அனுபவித்திருக்கிறேன்.  என்னிடம் பணம் பறிப்பதற்காக மிக நெருக்கமான சிலர் என்னை தவறாக வழிநடத்தி துரோகம் செய்திருக்கின்றனர்.  சொத்துக்காக பங்காளிகளிடம் நடந்த பிரச்சனைதானே மகாபாரதப் போருக்கு காரணமாயிற்று.  நேர்மையற்ற தலைவர்களின் நாடு பிடிக்கும் பேராசைதானே முதல் மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு காரணமாயிற்று.  சில மாதங்களுக்கு முன் எனது மாணவர்களிடம் ‘பாவத்தில் பங்கு’ என்ற தலைப்பில் பேசியதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு நாள் வகுப்பறையில், ‘மாணவர்களே! ஒரு நிகழ்வைப் பற்றி சொல்லட்டுமா?’ என்றேன்.  மாணவர்கள், ‘சொல்லுங்கள் சொல்லுங்கள்’ என்று மகிழ்ச்சியாக ஆரவாரம் செய்தனர்.  சில நாட்களுக்கு முன் தொலைபேசி ஒலித்தது.  எடுத்து காதில் பொருத்தினேன்.  மறு முனையிலிருந்து எனது அம்மாவின் குரல்.  ‘சொத்துக்கள் பாகப்பிரிவினை செய்கிறோம்’ என்று எனக்கு ஒதுக்கிய சொத்து விபரம் பற்றி சொன்னார்கள்.    நானோ, ‘எனக்கு வேண்டாம்!  ஏற்கனவே இருப்பதே போதும்!  எனது பங்கை வேறு யாருக்காவது கொடுத்துவிடுங்கள்’ என்றேன்.  என் மகளிடம் இதைப் பற்றி பேசினேன்.  ‘அப்பா, சொத்தை ஏன் வேண்டாம் என்று சொன்னீர்கள்.  பெரும் பணம் நமக்கு கிடைக்குமல்லவா?’ என்றாள்.

நானோ! ‘சொத்து மட்டுமா கிடைக்கும் பாவமும் சேர்ந்தல்லவா கிடைக்கும்.  ஏற்கனவே கிடைத்த பாவத்தை விடுவதே பெரும்பாடாய் இருக்கிறது.  புதிதாக ஏன் பாவத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்’ என்றேன்.  ‘அதெப்படி?’ என்றாள் என் மகள்.

‘பிறரிடமிருந்து நாம் எதையாவது இனாமாக பெரும்போது, அவர்கள் பாவத்தில் ஒரு பங்கு நம்மை வந்தடைகிறது.  பெற்றோரிடமிருந்து பெற்றாலும் அப்படித்தான். ஆதலால் இலவசமாகப் பெறுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.  நாம் கடினமாக உழைத்துச் சேர்ப்பதே நமக்கு நல்லது’ என்றேன்.

‘சொத்தை இலவசமாக வாங்கும் போது அவர்கள் செய்த பாவம் தான் நமக்கு வருமா? புண்ணியம் வராதா?’ என்றாள்.

‘ஒருவர் செய்த புண்ணியத்தின் பலன் அவர்களையே அடையும்.  பாவம் மட்டும் தான் சொத்தை அனுபவிப்பதன் மூலம் பிறரைச் சேரும்’ என்றேன்.

‘அப்படியென்றால் நான் உங்களிடமிருந்து பெற்றுக் கொண்டாலும் என்னை பாவம் சேருமா’ என்றாள் என் பெண்.  ‘ஆம் கண்டிப்பாக சேரும் பெண்ணே!’ என்றேன் புன்னகையுடன்.  மேலும், அதனால் என்னிடமிருந்து உனது அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும்.  

இப்போது நீ மிகவும் இளையவள்.  சம்பாதிக்கும் நிலையில் இல்லை.  உன்னை மேம்படுத்துவதற்காக என்னிடமிருந்து உதவிகள் பெற்றுத்தானாக வேண்டும்.  உன்னை வளப்படுத்த, வலுப்படுத்த கடுமையாக உழைக்க வேண்டும்.  உன்னால் சம்பாதிக்கும் நிலை வந்தவுடன் என்னிடமிருந்தோ, வேறு யாரிடமிருந்தோ பணம் பெற்றுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.  உன் தேவையை பூர்த்தி செய்து கொண்டு உனது நலம்விரும்பிகளின் தேவையையும் கண்டிப்பாக பூர்த்தி செய்ய வேண்டும்’ என்றேன்.  மீண்டும், ‘தற்போது உங்கள் தேவைக்கு நாங்கள் கொடுப்பது போல் எங்களது தேவையை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டியது உனது கடமை’ என்றேன்.

ஆம் மாணவர்களே! நீங்களும் அப்படித்தான் உங்கள் பெற்றோரிமிருந்து உங்கள் அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் தான் பெற்றுக் கொள்ள வேண்டும்.  உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வது தான் பெற்றோர்களின் கடமையேயொழிய உங்கள் ஆசைகளையெல்லாம் பூர்த்தி செய்வது அவர்களது கடமையல்ல.  நீங்கள் அதிகமாக பெற்றுக் கொண்டால் அதை வட்டியுடன் திரும்ப கொடுக்கும் வரை மறுபடியும் மறுபடியும் பிறந்து கொண்டே இருப்பீர்கள்.  ஆம் உங்கள் செயல்களின் விளைவுகளை எங்கு பிறந்தால், எந்த பந்தத்தைக் கொடுத்தால் அனுபவிக்க முடியுமோ அந்த பந்தத்தை இயற்கை கொடுத்துக் கொண்டேயிருக்கும் என்றேன்.

ஆதலால் இப்போதே முடிந்தளவு பெற்றோருக்கு உதவி செய்யுங்கள்.  வீட்டை சுத்தப்படுத்துவது, சமையலறை உதவிகள், கடைகளுக்கு சென்று சிறு சாமான்கள் வாங்குவது போன்றவற்றில் பெற்றோருக்கு உதவலாமே!

மேலும் உங்களை உயர்த்துவதற்காக ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் சுற்றத்தினர்களிடமிருந்தும் உதவிகளைப் பெறுகிறீர்கள்.  ஆதலால் அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதும் உங்கள் கடமையாகும்.  யாரிடமிருந்தெல்லாம் உங்கள் வளர்ச்சிக்காக பெற்றுக் கொள்கிறீர்களோ அவர்களுக்கு நீங்கள் கண்டிப்பாக உதவ வேண்டும்.  ஆதலால் குறைவாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.  கடினமாக உழைத்துச் சம்பாதியுங்கள்.  நிறைய உதவுங்கள் என்றேன்.  

அன்பு நெஞ்சங்களே! நீங்களும் அப்படித்தான்.  உங்கள் வளர்ச்சிக்காக யாரிடமிருந்தெல்லாம் உதவி பெறுகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் பல மடங்கு திருப்பிக் கொடுப்பது உங்கள் கடமையாகும்.  அதுவரை இயற்கை உங்களை நிர்பந்தித்துக் கொண்டேயிருக்கும்.  யோசித்துப் பாருங்கள்.  பூமிக்கு வரும் போது எதைக் கொண்டு வந்தோம், பூமியை விட்டு விலகும் போது எதைக் கொண்டு செல்கிறோம்.  எதையெல்லாம் விட்டுச் செல்கிறோமோ அதற்காக பலர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.  எதைக் கொண்டு செல்கிறோமோ அதற்காக கவலைப்படுவதில்லை. 

ஆம், வரும் போது பாவ புண்ணியத்தை மட்டுமே கொண்டு வந்தோம்.  செல்லும் போதும் பாவ, புண்ணியத்தை மட்டும் எடுத்துச் செல்கிறோம்.  

இதை ஆழ்ந்து சிந்தித்தால், காரண காரிய நியதிகளை ஆராய்ந்தால் நன்கு புரிந்து கொள்வீர்கள்.  நன்றி. வணக்கம்.  அடுத்த பதிவில் சந்திப்போம்.